புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜு (வயது 50). குடிசை மாற்று வாரியத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு வள்ளியம்மாள் (46) என்ற மனைவியும், யோகேஷ்வரி (17) என்ற மகளும் உள்ளனர். ராஜு வுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது வலது காலில் தொடை வரை அகற்றப்பட்டது.
இதையடுத்து அவர் 3 சக்கர வண்டியில் தான் வேலைக்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு காலில் வலி அதிகமாகி அவதிப்பட்டதுடன் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மனைவி வள்ளியம்மாளிடம் தனக்கு நோய் கொடுமை அதிகமாக உள்ளதாகவும், இதனால் வாழ விருப்பம் இல்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ள போவதாக அடிக்கடி கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று ராஜு உடையார் தோட்டத்தில் தாங்கள் கட்டி வரும் புதிய வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன வள்ளியம்மாள் ராஜுவின் அக்கா சாந்திக்கு போன் செய்து அங்கு சென்று பார்க்குமாறு கூறினார்.
உடனே சாந்தி அங்கு சென்று பார்த்த போது, ராஜு வீட்டின் உள்ளே சிலாப்பில் இருந்த கம்பியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசி நாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.