புதுடெல்லி:
வீட்டு வாடகை, மின்கட்டணம், தொலைபேசி கட்டணம் உள்பட அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களில் பாக்கி வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து மேற்படி கட்டணங்களில் பாக்கி வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவித்த தேர்தல் கமிஷன், இந்த கட்டணங்களில் ‘பாக்கி இல்லை’ என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து சான்றிதழ் பெற்று வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதனால் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் சிலர் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.
இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு யோசனை தெரிவித்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் இந்த பரிந்துரை, விரும்பத்தக்கதாக இல்லை எனக்கூறி தேர்தல் கமிஷனின் கடிதத்தை சட்ட அமைச்சகம் நிராகரித்து விட்டது.
மேற்படி தடையில்லா சான்றிதழ்கள் ஒருதலைப்பட்சமாக அமைந்து விட வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ள சட்ட அமைச்சகம், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் அதை முடிவுக்கு கொண்டுவர நாட்கள் பிடிக்கும் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.