சென்னை:
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒவ்வொரு அரசாங்கமும் தனது குடிமக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பான, ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்ப உரிமையை வழங்க கடமைப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் பத்திரம் அத்தகைய சாதனமாக இருந்து வந்தது.
பொது வைப்பு நிதி (PPF), சிறு சேமிப்பு ஆகியவற்றின் வட்டியை அரசு குறைத்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி பத்திரங்களை ஒழித்துவிட்டது. இது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள இன்னொரு பலத்த அடி.
2018 ஜனவரியில் இதைச் செய்தார்கள். நான் கண்டனம் தெரிவித்தேன். மறுநாளே அரசு தன் நடவடிக்கையை விலக்கிக் கொண்டது. இப்பொழுது மீண்டும் ரத்து செய்திருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். சமூக வலைத்தலங்களில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.