செய்திகள்

தஞ்சை அருகே அரசு பஸ்- தனியார் பஸ் மோதல்: டிரைவர்கள் உள்பட 3 பேர் பலி

தஞ்சை அருகே பல்லவராயன் கோட்டை என்ற இடத்தில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இருந்து நாகைக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதேபால் திருவாரூரில் இருந்து தஞ்சையை நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது.

இன்று மதியம் 1 மணியளவில் தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை அருகே பல்லவராயன் கோட்டை என்ற இடத்தில் வந்த போது அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுக்கிடையே சிக்கி தனியார் பஸ் டிரைவர் ராஜா, அரசு பஸ் டிரைவர் மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து பற்றி அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.