பூந்தமல்லி:
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று காலை அரசு விரைவு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் 40 பயணிகள் இருந்தனர். டிரைவர் ஏழுமலை பஸ்சை ஓட்டினார்.
பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே சென்றபோது திடீரென்று பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதனால் பயணிகள் அலறினார்கள். பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை வெளியே மீட்டனர்.
3 பெண்கள் உள்பட 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.