செய்திகள்

சூரியன் மறைவிற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை: கோவா அரசு முடிவு

சூரியன் மறைவிற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்க கோவா அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுலா துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மாலை மலர்

கோவா:

இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவா மாநிலம் விளங்கி வருகிறது. இங்குள்ள கடற்கரைகளில் தினமும் இரவு நேரங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது.

இந்தநிலையில் கோவா கடற்கரையில் மது அருந்தி விட்டு கடலில் குளிக்கும் சில நபர்கள் கடலில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சூரியன் மறைவிற்கு பிறகு கோவா கடலில் குளிக்க கூடாது என்ற தடையை அம்மாநில அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக சுற்றுலா துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆமதாபாத்தை சேர்ந்த 2 மாணவர்கள் வடக்கு கோவாவில் உள்ள கண்டோலிம் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன் 2 பேர் பலியாகினர். சூரியன் மறைவிற்கு பிறகே இந்த சம்பவங்கள் நிகழ்கிறதாக அங்கு இருக்கும் சுற்றுலா பயணிகள் கூறிகின்றனர்.

எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சூரியன் மறைவிற்கு பிறகு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க கூடாது என்ற தடையை கோவா அரசு கொண்டு வர உள்ளது. கோவாவில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பயிற்சி பெற்ற பாதுகாப்பு வீரர்களை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபடவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக சுற்றுலா துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.