செய்திகள்

தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி அமைக்க முடியாது- ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் தனிக்கட்சி இனிமேல் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாது என்று மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே. வாசன் பேசினார். gkvasan #tamilnadugovernment

மாலை மலர்

மதுரை:

மதுரையில் இன்று த.மா.கா. வட்டார, நகர, பேரூராட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனைத்துக்கட்சி கூட்டம் நடந்துள்ளது. இதில் கட்சி பேதமின்றி கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

காவிரி பிரச்சினை போன்று தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கும் அனைத்து கட்சியினரும் ஒரே குரலில் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என கருதுகிறேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு  மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தின் நிலத்தடி நீரை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது அல்ல என நான் கருதுகிறேன். நாகை மாவட்டத்தில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறி விட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி வாடியுள்ளன. அதேசமயம் கர்நாடகமோ 16 லட்சமாக இருந்த பாசன பரப்பை 18 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 50 ஆண்டு காலத்தில் ஏராளமான புதிய கட்சிகள் வந்துள்ளன. ஆனால் அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை. தேர்தல் நேரத்தில் த.மா.கா. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடும்.

இது தனிக்கட்சிக்கான சீசன் இல்லை. தமிழகத்தில் தனிக்கட்சி இனிமேல் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாது.

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும்வகையில் இல்லை. ஊழல் பிரச்சினையை பேசி எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews gkvasan #tamilnadugovernment