கிருஷ்ணகிரி:
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நதி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கம் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உள்ளனர்.
ஏற்கனவே சாகுபடி செய்த பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி உள்ளன. இந்த சூழ்நிலையில் 192 டி.எம்.சி என்பதை குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கும், டெல்டா மாவட்ட மக்களுக்கும் கொடுக்கும் தண்டனையாக உள்ளது. தமிழக அரசின் அலட்சியமே இதற்கு காரணம். தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரவேண்டும். மின் வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். உணவில் கலப்படம் செய்வது அதிகரித்து உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews