செய்திகள்

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்- ஜிகே வாசன்

ராணுவத்துக்கு இணையாக எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1965-ம் ஆண்டு முதல் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் சர்வதேச இந்திய எல்லையில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு 1965 ஆண்டு முதல் இன்று வரை ராணுவத்துக்கு இணையான சலுகைகள் மற்றும் அந்தஸ்துகள் வழங்கப்படவில்லை என அனைத்திந்திய முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கான நலச்சங்கம் குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக இந்திய எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ராணுவத்துக்கு இணையான கடினமான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

2012-ல் மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பு படையும், துணை ராணுவமும் ராணுவத்துக்கு இணையானது என அறிவித்தது. இப்படி கடந்த காலங்களில் மத்தியில் ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லைப் பாதுகாப்பு படைக்கு ராணுவத்துக்கு இணையான சலுகைகள், அந்தஸ்துகள் வழங்க வேண்டும் என அவ்வப்போது அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதும் நடைபெற்றது.

ஆனால் எல்லைப் பாதுகாப்பு படைக்கு ராணுவத்துக்கு இணையான சலுகைகள், அந்தஸ்துகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. எனவே மத்திய அரசு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படைக்கு ராணுவத்துக்கு இணையான சலுகைகள், அந்தஸ்துகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews