அருந்ததி ராய் 
செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் போலியான பெயர், முகவரியை கொடுங்கள்: அருந்ததி ராய்

மக்கள் தொகையை கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் போலியான பெயர் மற்றும் முகவரியை கொடுக்குமாறு பிரபல எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

விவாதத்தின் முடிவில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதற்கான கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.

இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிப்பதுதான் இந்த பதிவேடு. நாட்டின் ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கூறியுள்ளது. 

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, ஒரு "வழக்கமான குடியிருப்பாளர்" என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபர், அல்லது அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்பும் நபரை குறிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு "வழக்கமான குடியிருப்பாளரும்" இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடைய இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடானது, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான முதல்படியாக கருதப்படுகிறது.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட பிரபல எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் பேசியதாவது:- 

''தேசிய மக்கள் தொகை பதிவுக்கான கணக்கு எடுப்பதற்காக அதிகாரிகள் உள்ள வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் உங்களது பெயர், தொலைபேசி எண்களை பதிவு செய்துகொள்வார்கள். 

மேலும், ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றின் தகவல்களையும் உங்களிடம் இருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்கள். 

அவ்வாறு சேகரிக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தகவல் களஞ்சியமாக மாறிவிடும்.

நாம் இதற்கு எதிராக போராட வேண்டும். அதற்காக திட்டம் தீட்டவேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து விவரம் சேகரிக்க வரும் அதிகாரிகள் உங்கள் பெயர் மற்றும் முகவரியை கேட்கும் போது பொலியான பெயர் மற்றும் முகவரியை கொடுங்கள். 

தடியடிகளையும், துப்பாக்கி குண்டுகளையும் எதிர்கொள்ள நாம் ஒன்றும் பிறக்கவில்லை. 

நாட்டில் சட்டவிரோதமாக தங்குபவர்களை அடைத்துவைக்க காப்பகங்கள் எதுவும் கட்டப்படவில்லை என அவர் (பிரதமர் மோடி) பொய் சொல்கிறார். தான் சொன்னது பொய் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் பொய் சொல்கிறார். 

எனென்றால் எதிர்த்து கேள்வி கேட்காத ஊடகங்கள் அவரிடம் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக போராடுபவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த இரண்டின் உள்ளடக்கங்களையும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தலித்துகள் பழங்குடிகள் மற்றும் ஏழை மக்களுக்கு எதிரானது’’ 

இவ்வாறு அவர் பேசினார்.