சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் முதல் கிராசை சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஜஸ்வர்யா (வயது 16), சரண்யா (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவர் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிவபாலனும், பிரேமாவும் பிரிந்து தனி தனியாக வசித்து வருகிறார்கள்.
இதனால் ஐஸ்வர்யா மற்றும் சரண்யா ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள அவர்களது பெரியம்மா கஸ்தூரி வீட்டில் தங்கியிருந்தனர். இதில் ஐஸ்வர்யா 11-ம் வகுப்பும், சரண்யா 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கஸ்தூரி வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல் 3 மணியளவில் ஐஸ்வர்யாவை போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கஸ்தூரி வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஐஸ் வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தாய், தந்தை பிரிந்து வாழ்ந்து வருவதால் ஏற்பட்ட மன வேதனையில் தவித்த அவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தற்கொலைக்கு முயன்றதும், அப்போது உயிர் பிழைத்த அவர் தற்போது மீண்டும் தூக்குபோட்டு தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews