செய்திகள்

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் - ஜே.சி.பி. டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜே.சி.பி. டிரைவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த திருமல்வாடி அருகே உள்ள கீழ்சீங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30), ஜே.சி.பி. டிரைவர்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரம் 18-ந் தேதி பெல்லுஹள்ளியை சேர்ந்த வாய் பேச முடியாத, பூ கட்டும் தொழில் செய்து வந்த 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பென்னாகரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நேற்று இந்த வழக்கில் நீதிபதி (பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பு வழங்கினார். மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். ஒரு மாதத்திற்குள் அபராதம் கட்ட தவறினால், அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிபதி ஜீவானந்தம் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் உமா மகேஸ்வரி ஆஜரானார். #tamilnews