செய்திகள்

இந்தியா போன்ற ஆடுகளம் ஆஸ்திரேலியாவிற்கு இருக்காது - ஒட்டிஸ் கிப்சன்

இந்தியாவிற்கு எதிராக வேகப்பந்து வீச்சு ஆடுகளம் தயார் செய்ததுபோல் ஆஸ்திரேலியாவிற்கு தயார் செய்யமாட்டோம் என ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார். #SAvAUS

மாலை மலர்

அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா ஆடுகளத்தில் பவுன்ஸ், கேரி, வேகம் இருக்கும். இதை எளிதாக சமாளித்து விடலாம் என்று இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆடுகளத்தில் பவுன்ஸ்,கேரி, வேகத்துடன் ஸ்விங்கும் (சைடு மூவ்மென்ட்) இருந்தது. குறிப்பாக கேப்டவுன் நியூலேண்ட், ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது.

இதனால் இந்தியா எப்படி திணறியதோ, அதேவகையில் தென்ஆப்பிரிக்காவும் திணறியது. முதல் இரண்டு டெஸ்டிலும் டாஸ்  வென்று முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்ற காரணத்தினாலேயே தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற முடிந்தது. 3-வது டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்ததோடு வெற்றியும் பெற்றது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது. இந்தியாவிற்கு எதிரான ஆடுகளம் போன்றுதான் தயார் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதேபோன்று ஆடுகளம் தயாரித்தால் சிக்கிக்கொள்வோமோ? என்ற அச்சம் தென்ஆப்பிரிக்காவிற்கு உள்ளது.

விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சை திறமையாக எதிர்கொள்ளும் என்பதால், நான்கு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்குவோம் என்ற கொள்கையை தென்ஆப்பிரிக்கா தளர்த்தியுள்ளது. இதனால் இந்தியாவிற்கு தயார் செய்த ஆடுகளத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா மாறுபட்டுள்ளது.

இந்தியா பவுன்ஸ் இல்லாத வேகம், ஸ்லோ ஆடுகளத்தில் விளையாடியவர்கள். அதனால் நான்கு வேகப்பந்து வீச்சாளருடன் களம் கண்டோம். ஆஸ்திரேலியா வீரர்கள் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் ஆடுகளத்தில் மாற்றம் இருக்கும் என தென்ஆப்பிரிக்கா அணி தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா மாறுபட்ட எதிரணி. இதற்கு ஏற்றபடி அணியை தயார் செய்ய வேண்டியதால், சிறு மாறுபாடு இருக்கும்.

நாங்கள் டர்பன் சென்றடைந்த பின்னர்தான், அங்கு என்ன மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். கடந்த முறை நாங்கள் ஆடுகளம் தயாரிப்பாளரிடம் பேச முயற்சி செய்தோம். இதனால் என்ன நிகழ்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே, ஆடுகளம் பராமரிப்பாளரை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டுள்ளோம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது பார்க்க வேண்டும்.