மும்பை:
மும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே. சுருக்கமாக ஜே டே என்று அழைக்கப்பட்டார். இவர் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் குறித்து எதிர்மறையான கட்டுரைகளை எழுதி இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி மும்பை புறநகர் பகுதியில் மர்ம நபர்கள் ஜே டேயை சுட்டுக்கொன்றனர்.
இந்த கொலை வழக்கில் சோட்டா ராஜன், பெண் நிருபர் ஜிக்னா வோரா உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வினோத் செம்பூர் என்பவர் இறந்துவிட்டார். 2016 அக்டோபர் மாதம் சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் உள்ளார்.
சோட்டா ராஜன் அளித்த வாக்குமூலத்தில் நிழல் உலக தாதா தாவூத்துடன் நெருக்கம் காட்டியதால் ஜே டேவை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் ஜே டே கொலை வழக்கில் மும்பை சிறப்பு கோர்ட்டில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என்று கூடுதல் செசன்ஸ் நீதிபதி சமீர் அட்கர் தீர்ப்பு அளித்தார். பத்திரிகையாளர் ஜிக்னா வோரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பவுல்சன் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. முதல் குற்றவாளி சோட்டா ராஜன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். #ChhotaRajan