சென்னை:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன், சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், பக்தர்கள், தனிமனித இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வழக்கமான விஷேச பூஜைகள், பிரசாதம் இன்றி சதுர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. உடல்வெப்ப நிலை பரிசோதனைக்கு பின் மாஸ்க் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயகர் கோவிலில் காலையில் நடைபெற்ற சிறப்பு ஆரத்தியில் பக்தர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றி பங்கேற்று விநாயகரை வழிட்டனர். டெல்லி துவாரகாவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் உள்ள பிரமாண்டமான விநாயகருக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதேபோல் டெல்லி கன்னாட்பிளேசில் உள்ள விநாயகர் கோவில், நாக்பூர் விநாயகர் ஆலயம் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட அனைத்து கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.