எம்.எல்.ஏ.அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

ராணிப்பேட்டை காந்தி எம்.எல்.ஏ. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைப்பு

ராணிப்பேட்டை காந்தி எம்.எல்.ஏ. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போதை வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வாலாஜா:

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி. தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ராணிப்பேட்டை ரெயில் நிலைய ரோட்டில் வாரச்சந்தை அருகில் உள்ளது. இந்த அலுவலகத்தில் எம்.எல்.ஏ. அமரும் அறையின் ஜன்னல் கண்ணாடிகளை நேற்று மாலை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எம்.எல்.ஏ. அலுவலகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். வாலிபர் மதுபோதையில் இருந்ததால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. போதை தெளிந்த பின் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.