செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா?- அமைச்சர் செல்லூர்ராஜு பதில்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர்ராஜு பதில் அளித்துள்ளார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami

கடலூருக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வருகை தந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமானால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்றனர்.

குழு அமைத்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேத மதிப்பீடு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 4 லட்சத்து 19 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரம்.

இதுபோக வெளியிடங்களிலும் வெளி நபர்களிடம் பலர் கடன் வாங்கியுள்ளனர். அனைவரையும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளோம்.

மேலும் தமிழக அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்க உள்ளது. ஆகையால் இந்த அரசு விவசாயிகள்அரசு என்று எடுத்துக் காட்டுகிறது.

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை தனிப்பட்ட நிர்வாக அமைப்பு. இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்க முடியாது மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகக் குழு தீர்மானம் செய்து அவர்கள் நிதி ஒதுக்குவார்கள்.

தமிழகத்தில் 22 ஆயிரத்து 265 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் சாமர்த்தியமாக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT