புயல் நிவாரண நிதியை கலெக்டரிடம் நிறைநெஞ்சன், சாதனா ஆகியோர் வழங்கிய காட்சி 
செய்திகள்

கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய அண்ணன்-தங்கை

கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியல் பணத்தை வழங்கிய அண்ணன், தங்கையை அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி பாராட்டினார். #GajaCyclone

மாலை மலர்

அரியலூர்:

அரியலூரை சேர்ந்த ஜெயக்குமார்-சுபாலதா தம்பதியரின் மகன் நிறை நெஞ்சன் (வயது 14), மகள் சாதனா (9). தாமரைக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறைநெஞ்சன் 9-ம் வகுப்பும், சாதனா 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மாணவர்களான இவர்களுக்கு பெற்றோர் தினந்தோறும் வழங்கும் பாக்கெட் மணியை உண்டியலில் சேமித்து வைத்து வந்தனர்.

தற்போது கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த இருவரும் உதவ முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை எண்ணியுள்ளனர். மொத்தம் ரூ.7 ஆயிரத்து 200 இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு பெற்றோருடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் பணத்தினை ஒப்படைத்ததோடு, அதனை வைத்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளனர்.

அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாணவர்களான நிறை நெஞ்சன், சாதனா ஆகியோரை பாராட்டினார்.  #GajaCyclone