ஜி ராமகிருஷ்ணன் 
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள 27 எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளனர். அவர்கள் காஷ்மீர் சென்று பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட போது இங்கு உள்ள தலைவர்கள் காஷ்மீர் செல்ல முயன்றபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கூறி உள்ளனர்.

மொழிவழி மாநிலம் அமைக்ககோரி மாவட்ட தலைநகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம் நடத்த உள்ளது. வருகிற 1-ந்தேதி நாகர்கோவிலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து வருகிற 5-ந்தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சென்னையில் தென்மண்டல அளவில் நடக்கிறது. இதில் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

டாக்டர்கள் போராட்டம் 6-வது நாளாக நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபடாத சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் வாபஸ் என்று அறிவிக்க வைக்கிறார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஒப்பந்த சாகுபடி சட்டத்தின் சரத்துக்களை பரிசீலனை செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சூழலில் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதால் 17 வருவாய் கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்தந்த பகுதியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு நவீன தொழில் நுட்பக்கருவிகளை அரசு வழங்க வேண்டும்.