செய்திகள்

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நடைபயணம்: ஜி.ராமகிருஷ்ணன்

நெல்லையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இசக்கிமுத்து அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மாலை மலர்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 2003ல் கந்துவட்டி தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்று முதல் கந்துவட்டி வழக்குகள் பதிவு செய்வதில் காவல் துறையினர் அக்கறை காட்டவில்லை. தற்போது நெல்லையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு கந்துவட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க அரசு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஏழை மக்களுக்கும், சிறு தொழிலாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், தனது மனைவி குழந்தைகளுடன் தீக்குளித்தவர் கந்து வட்டி குறித்து ஏற்கனவே கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நவம்பர் 1-ந்தேதி தென்காசியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு 2-ந்தேதி நெல்லை கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.


கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் அறிக்கையின்படி உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ரேசனில் சர்க்கரை விலை உயர்ந்து உள்ளது. இதன் மூலம் ரே‌ஷன் பொருட்களை மத்திய அரசு நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே போல் அரசு பள்ளிகளையும் தனியாரிடம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அப்படி கொடுத்தால் ஏழை மாணவர்கள் கல்வி கற்க மிகுந்த சிரமமாகிவிடும். எனவே அரசு பள்ளிகளை தனியாரிடம் கொடுக்க கூடாது.

நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பே அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தோம். தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு கோவில்பட்டியில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.