திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஆவின் பொதுமேலாளராக இருப்பவர் முகமதுபரூக். இவர் ஆவின் பாலகம் விற்பனை இல்லாத செந்துறை பகுதியில் பூத் வைத்து ரூ.18 லட்சத்திற்கு பால் விற்பனை செய்ததாகவும், மேலும் விவசாயிகளிடம் வாங்கிய பாலுக்கு பணம் தராமல் பல லட்சம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதுமட்டுமின்றி அரசு நடத்தும் ஆவின் பாலகத்தை தனக்கு வேண்டிய நபர்களுக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆவின் சங்க தலைவர் செல்லச்சாமிக்கு ஏற்கனவே கார் இருக்கும் பட்சத்தில் புதிதாக சொகுசு கார் வாங்க கையெழுத்து போட்டு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் புகார் வந்தது.
இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை ஆவின் பெடரேசன் குழுவினர் திண்டுக்கல்லில் தங்கி ஆய்வு மேற்கொண்டனர். இதில் பொது மேலாளர் முகமதுபரூக் ரூ.18 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக மேலாளர் தினகரன் பாண்டியன், விற்பனை பிரிவு மேலாளர் வெங்கடேசன் ஆகியோருரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.