செய்திகள்

மாட்டுத்தீவன ஊழல் நான்காவது வழக்கில் லாலுவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு

மாட்டுத்தீவன ஊழல் நான்காவது வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு நாளை தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. #FodderScam

மாலை மலர்

பாட்னா:

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  

முதல் வழக்கில் 30-9-2013 அன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இரண்டரை மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இரண்டாவது வழக்கில் டியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து கால்நடை தீவனம் வாங்குவதற்காக ரூ.89.27 லட்சம் பணம் சுரண்டப்பட்ட வழக்கை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார்.

மூன்றாவதாக, சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து முறைகேடாக 37.62 கோடி ரூபாய் எடுத்த வழக்கில் 24-1-2018 அன்று லாலுவுக்கு ஐந்தாண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.

நான்காவதாக, தும்கா மாவட்ட கரூவூலத்தில் இருந்து 3.13 கோடி முறைகேடு செய்த வழக்கில் அவர் குற்றவாளி என இரண்டு நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 

#FodderScam #TamilNews