செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே ஒரே பள்ளியில் 4 மாணவர்கள் மாயம்

கும்மிடிப்பூண்டி அருகே ஒரே பள்ளியில் 4 மாணவர்கள் மாயமான சம்பவத்தையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் போலீசார் மாணவர்களை தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பஞ்செட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு ஒரக்காடு கிராமத்தைச்சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ஜவகர்ராஜ் (வயது14), ஆமிதாநெல்லூரை சேர்ந்த பிரவீன்ராஜ் (14), ஆரணியைச் சேர்ந்த சதீஷ் குமார் (14), ஆரம்பாக்கத்தைச்சேர்ந்த புருசோத்தமன் (14) ஆகிய 4 பேர் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று காலை பள்ளிக்குச் சென்ற 4 மாணவர்களும் மாலையில் பள்ளியை விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவர்கள் மாயமாகி இருப்பது தெரிந்தது.

இது குறித்து மாணவர் ஜவகர்ராஜீன் தந்தை ராஜா என்பவர் கவரைப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் போலீசார் மாயமான தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேரையும் தேடிவருகின்றனர்.