செய்திகள்

பிரிட்டனில் பயங்கர வெடிவிபத்து - 4 பேர் உயிரிழப்பு

பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் அமைந்த கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு 7 மணிக்குமேல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  வெடிவிபத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்களுடன் பேரிடர் மீட்புக் குழுவினரும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்ததால் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடை மற்றும் அதற்கு மேற்பகுதியில் உள்ள ஒரு வீடு கடுமையாக சேதமடைந்தது. இதில், பலத்த காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த  நிலையில், 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லண்டனில் இருந்து 143 கிமீ தொலைவில் உள்ள லெய்செஸ்டர் நகரில், குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.  #tamilnews

SCROLL FOR NEXT