செய்திகள்

நைஜீரியாவில் ஐ.நா. அமைப்பு நடத்திய அணி வகுப்பில் பயங்கரவாத தாக்குதல் - 4 பேர் பலி

நைஜீரியாவில் ஐ.நா. அமைப்பு நடத்திய அணி வகுப்பில் நிகழ்ந்த தாக்குதலில் லாரி டிரைவர் உள்பட 4 பேர் உயிர் இழந்தனர். இந்த தகவலை ஐ.நா. உலக உணவு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மாலை மலர்

அபுஜா:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு, அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.

போர்னோ மாகாணத்தில் உள்ள நக்லால் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஐ.நா. உலக உணவு அமைப்பை சேர்ந்தவர்கள் அணிவகுப்பு ஒன்றை நடத்தினர். ராணுவ பாதுகாப்புடன் இந்த அணிவகுப்பு நடந்தது.

ராணுவ வீரர்கள் ஐ.நா. உலக உணவு அமைப்புக்கு சொந்தமான லாரியில் இருந்தபடி அணிவகுப்பை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் ராணுவவீரர்கள் சென்ற லாரியை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த தாக்குதலில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உள்பட 4 பேர் உயிர் இழந்தனர். இந்த தகவலை ஐ.நா. உலக உணவு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அதே சமயம் தாக்குதலில் உயிர் இழந்த லாரி டிரைவர் மற்றும் கிளனர் ஐ.நா. உலக உணவு அமைப்பின் ஊழியர்களா என்பதை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். மேலும், தாக்குதலில் உயிர் இழந்த மற்ற 2 பேர் யார் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.