செய்திகள்

பிலிப்பைன்ஸ்: கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் 251 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

மணிலா:  

பிலிப்பைன்ஸ் நாட்டில் 251 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று போலிலியோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரியல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகு மணிலாவுக்கு கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. உடனே, அருகில் சென்ற படகுகள் மூலம் பலர் மீட்கப்பட்டனர். உடனடியாக கடலோர காவல்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த கடலோர காவல்படையினர் மீட்புப்பணிகளை தொடங்கினர். இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இறந்தவர்கள் குறித்த எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. கடலில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.