செய்திகள்

கோட்டை அருகில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 3 வீடுகளில் கொள்ளை

கோட்டை அருகில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 3 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

கோட்டை ரெயில் நிலையம் அருகே ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதி. இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது.

இந்த நிலையில் கப்பல் படை வீரர்கள் கார்த்தி, அகிலேஷ், செந்தில் ஆகிய 3 பேரும் வீடுகளை பூட்டி விட்டு வெளி மாநிலத்துக்கு பயிற்சிக்காக சென்றுள்ளனர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு இவர்களது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதற்கிடையே இன்று காலை வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இத்தகவல் வெளி மாநிலத்தில் பயிற்சியில் இருக்கும் வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது கொள்ளை போன பொருட்கள் எவை என தெரியாத நிலையில் கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கடும் பாதுகாப்பு மிகுந்த இங்கு வெளியாட்கள் யாரும் அத்துமீறி நுழைய முடியாது. எனவே இங்கு இருக்கும் பணியாளர்கள் தான் வீடு பூட்டப்பட்டிருக்கும் தகவல் அறிந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.