உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரையா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. அப்போது, கெடுபிடியாக நடந்துகொண்ட போலீசாருக்கு எதிராக கட்சியினர் கோஷமிட்டனர்.
இதனால் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் யாதவ் தாக்கப்பட்டார். மோதல் தொடர்பாக
பிரதீப் யாதவ் உள்ளிட்ட சிலரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று கஸ்டடியில் வைத்தனர். போலீசார் அவர்களை மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து சமாஜ்வாடி தொண்டர்கள் இன்று பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்க அகிலேஷ் தனது ஆதரவாளர்களுடன் வந்துகொண்டிருந்தார்.
ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் கூடியிருந்த தொண்டர்கள், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும், போலீசாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், அகிலேஷ் யாதவ், மாநில தலைவர் நரேஷ் உத்தம் மற்றும் எம்.எல்.ஏ. அமிதாப் பாஜ்பாய் உள்பட பலரை தடுத்து நிறுத்தினர். அவர்களை ஒரு வேனில் ஏற்றி உன்னாவ் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.