ரஷீத் மசூத் 
செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட முன்னாள் மத்திய மந்திரி திடீர் மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரஷீத் மசூத் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலை மலர்

சகாரன்பூர்:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரஷீத் மசூத் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 73 வயதான இவருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். கொரோனாவில் இருந்து மீண்டதையடுத்து, ரஷீத் மசூத் தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்தின் சகாரன்பூருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தார்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவரை ரோர்கி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது.

8 முறை எம்.பி.யாக இருந்த ரஷீத் மசூத், கடந்த 1990-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மந்திரி சபையில், சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் ஆவார்.