செய்திகள்

மும்பை ரஞ்சி அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சரத் ராவ் மறைவு

மும்பை ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சரத் ராவ் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சரத் ராவ். இவர் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாம்பே அணிக்காக விளையாடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இவர், 1980-81ல் நடந்த ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய பாம்பே அணியில் இடம்பெற்றிருந்தார். இதுதவிர கர்நாடக மாநில அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், 60 வயதான சரத் ராவ் உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்தார். நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1980-81 முதல் 1985-86 காலகட்டத்தில் 10 முதல்தர போட்டிகளில் விளையாடிய சரத் ராவ், 16 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாகும். தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாடியிருக்கிறார். இது தவிர டாடா ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்காகவும் பல்வேறு போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

SCROLL FOR NEXT