கோவை:
அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா குறித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை கொடிசியாவில் இன்று மாலை நடக்கிறது.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றுகிறார். இதில் அ.தி.மு.க. புரட் சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த தலைவர்கள் பேசுகின்றனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, தாமோதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
துக்கநிகழ்வில் தினகரன்- திவாகரன் சந்திப்பு என்பது இயல்பானது. அவர்கள் எதையோ புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்
ஜெயலலிதா மறைவில் இருக்கும் மர்மம், அதற்கு காரணகர்த்தாவாக இருக்கும் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கப்பட்ட தர்மயுத்தம் தொடர்கின்றது. எங்கள் தரப்பில் வைக்கப்பட்ட இரு கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் இரு அணிகள் இணையும் சூழல் ஏற்படும்.
தமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி நடைபெறுகின்றது. ஜெயலலிதா சிந்தித்த ஆட்சி இதுவல்ல. தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்ற தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் ஆட்சி தான் நடக்கிறது.
மாணவர்களின் செயல்பாடு வேகமாகவும், முற்போக்காகவும் இருக்கும். மாணவர்கள் மீதான நடவடிக்கையின் போது ஆட்சியாளர்கள் பகுத்தாய்ந்து செயல்பட வேண்டும்.
நடிகர் கமலை விமர்சிக்கும் போது அமைச்சர் ஜெயக்குமார் நல்ல மனப்பக்குவத்துடன் பேச வேண்டும். நடிகர் கமல் கருத்துக்கு தக்க பதிலை அமைச்சர் ஜெயக்குமார் சொல்ல வேண்டும். போகிற போக்கில் எதையாவது சொல்லக் கூடாது.
உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் ஓ.பி.எஸ். அணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.