கொலை செய்யப்பட்ட 3 பேர் 
செய்திகள்

முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை - திமுக பெண் பிரமுகர் மகன் கைது

நெல்லையில் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலை மலர்

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருக சங்கரனுடன் மேலப்பாளையம் என்ஜினீயர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.

கடந்த 23-ந் தேதி உமா மகேஸ்வரியின் வீட்டில் புகுந்த மர்மகும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. வீட்டில் இருந்த அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

3 பேரின் உடல்களும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனித்தனியாக கிடந்தது. கொலையாளிகள் கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொலை செய்தது தெரிய வந்தது.

தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி நெல்லை மாகராட்சியில் முதல் பெண் மேயராக பொறுப்பு வகித்தவர். அவர் கணவருடன் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

அதே நேரத்தில் சொத்து பிரச்சினைக்காக கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கடந்த ஒருவாரமாக தீவிர விசாரணை நடத்தினர்.

உமா மகேஸ்வரி சங்கரன் கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். அங்கு போட்டியிட தி.மு.க.வில் மேலும் பலர் டிக்கெட் கேட்டிருந்த நிலையில் உமா மகேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. இது அவருக்கு அரசியலில் எதிரிகளை உருவாக்கி இருந்தது.

இதனை சீனியம்மாள் மறுத்தார். உமா மகேஸ்வரி கொலையில் எனக்கு தொடர்பு இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளின் விவரங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் உமா மகேஸ்வரியின் வீட்டருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான கேமரா காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை பற்றி துப்பு துலங்கும் வகையில் போலீசுக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தது.

அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் கொலை நடந்த அன்று சந்தேகப்படும் படியாக ஒரு கார் 2 முறை உமா மகேஸ்வரியின் வீட்டை கடந்து சென்றது தெரியவந்தது. இதனால் அந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அந்த காரில் சென்றவர்கள் யார்? அது யாருடையது? என்பது பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த கார் தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலையில் அவருக்கு நிச்சயம் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

அப்போது போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் கார்த்திகேயனை போலீசார் தேடிவந்தனர். அவர் மதுரையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

உடனடியாக அவர் நெல்லை கொண்டு வரப்பட்டார். நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன், துணை கமி‌ஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கார்த்திகேயனிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் உமா மகேஸ்வரி உள்பட 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கொலைக்கு யார்? யார்? உடந்தையாக இருந்தார்கள் என்பது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரசியல் பகை காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பது வெட்ட வெளிச்சமானது. இது தொடர்பாக தனது தாய் சீனியம்மாளின் அரசியல் வாழ்க்கை உமா மகேஸ்வரியால் அழிந்து போனதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:

‘‘முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியால் எனது தாய் சீனியம்மாள் அரசியலில் வளர முடியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் உமா மகேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதற்கான நேரம் பார்த்து வீடு புகுந்து கொலை செய்தோம்’’ என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ரகசிய அறையில் வைத்து கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உமாமகேஸ்வரியிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

கைதான கார்த்திகேயன் கூலிப்படையை வைத்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்கள் யார் யார் என்பது விரைவில் தெரிய வரும்.

அரசியல் பகை காரணமாக நெல்லையில் பிரபலமான தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொல்லப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.