செய்திகள்

தேர்தல் கமி‌ஷன் செயல்பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டது- ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

தேர்தல் கமி‌ஷன் செயல்பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். #ElectionCommission #RamnathKovind

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய தேர்தல் கமி‌ஷனின் செயல்பாடுகள் அதன் நம்பகத்தன்மையை பாதித்து இருப்பதாக ஏற்கனவே முன்னாள் உயர் அதிகாரிகள் பலர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இப்போது முன்னாள் உயர் அதிகாரிகள் 80 பேர் கையெழுத்திட்டு புதிதாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் முன்னாள் டெல்லி போலீஸ் கமி‌ஷனர் ஆர்.எஸ்.குப்தா, முன்னாள் விமானப்படை துணை தளபதி ஆர்.சி.பாஜ்பாய், முன்னாள் வெளிவிவகார உயர் அதிகாரி அசோக்குமார், முன்னாள் ராணுவ துணை தளபதி ஏ.கே.ஷானி மற்றும் முன்னாள் உயர் ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் கையெழுத்திட்டு உள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

தேர்தல் கமி‌ஷன் மீது அதிருப்தி தெரிவித்து நாங்கள் ஏற்கனவே தங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். இதன் பிறகும் கூட தேர்தல் கமி‌ஷனின் போக்கில் மாற்றம் தென்படவில்லை.

இப்போது தேர்தல் கமி‌ஷன் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது அதன் மீதான நம்பகத்தன்மை கவலை அடைய செய்கிறது.

தேர்தல் கமி‌ஷன் மீதான களங்கம் உச்சக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. இவர்களால் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் அதிகரித்து இருக்கிறது. அதற்கான திறன் தேர்தல் கமி‌ஷனிடம் தென்படவில்லை. அதன் செயல்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது.

நாங்கள் நாட்டின் முக்கியமான குடிமகன்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் கவலையை உங்கள் முன் வைக்கிறோம்.

ஜனநாயகத்தில் தேர்தல் கமி‌ஷனின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதனை தரம் தாழ்த்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு தேர்தல் கமி‌ஷன் வளைந்து கொடுத்து பாரபட்சமாக நடக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நபர்களின் நலனுக்கு தேர்தல் கமி‌ஷன் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் தேர்தல் கமி‌ஷனின் மரியாதை தரம் தாழ்த்தப்பட்டு உள்ளது. ஆளும் கட்சி தேர்தல் விதி மீறல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறி உள்ளனர். #ElectionCommission #RamnathKovind