செய்திகள்

இஸ்ரோ முன்னாள் தலைவர் ராவ் காலமானார்

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான உடுப்பி ராமச்சந்திர ராவ், பெங்களூரில் இன்று காலமானார்.

மாலை மலர்

பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திர ராவ் (85). விஞ்ஞானியான இவர் இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்றி வந்தவர்.

இவர் 1984 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா ஏவுவதற்கான பணிகளில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்திர ராவ் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை ராமச்சந்திர ராவ், பெங்களூரில் காலமானார். இதுகுறித்து இஸ்ரோவின் செய்தி தொடர்பாளர் தேவிபிரசாத் கர்னிக் கூறுகையில், இன்று அதிகாலை 3மணியளவில் ராமச்சந்திர ராவ் மரணம் அடைந்தார் என தெரிவித்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

ஏற்கனவே, 1976ல் பத்ம பூஷண் விருதை பெற்ற இவர், மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை இந்த ஆண்டில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.