செய்திகள்

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: ஹனிபிரீத் முன்னாள் கணவர் புகார்

குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத்தின் முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரியானா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் கற்பழிப்பு வழக்குகளில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 35-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல்வேறு வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து, ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்திடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், ஹனிபிரீத்தின் முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அரியானா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரில், ‘எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு பாதுகாப்பு வேண்டும். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தனது முன்னாள் மனைவியான ஹனிபிரீத் சிங்கிற்கும், ராம் ரகீம் சிங்கிற்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக விஸ்வாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT