புதுடெல்லி:
இந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.
இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம் வரும் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக இருந்து நேற்று ஓய்வு பெற்ற ராஜீவ் மஹ்ரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மத்திய நிர்வாகம் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. உள்துறை செயலாளராக ஓய்வு பெற்று சில மணி நேரங்களிலேயே அவரிடம் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.