தற்கொலை 
செய்திகள்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

வில்லியனூர் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் முன்னாள் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள சிவராந்தகம் நகரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது58) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பாப்பாத்தி.

இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் தற்போது தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

இந்தநிலையில் மது குடித்துவிட்டு வந்த அர்ச்சுனனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவி வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் மன வருத்தம் அடைந்த அர்ச்சுனன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகளின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று வீடு திரும்பிய பாப்பாத்தி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அர்ச்சுனன் மகன் அருள்பிரசாத் மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.