தேனி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி திட்டக்குடியை சேர்ந்த பெண் என்ஜீனீயர் சுபா பலியானார். இது பற்றி அவரது தந்தை செல்வராஜ் கண்ணீருடன் கூறியதாவது:-
எனக்கு 3 குழந்தைகள். 3-வது குழந்தைதான் சுபா. கடைசி குழந்தை என்பதால் அவரை நானும், எனது குடும்பத்தினர் அனைவரும் செல்லமாக வளர்த்து வந்தோம். சிறு வயதில் இருந்தே சுட்டியாக இருந்தாள்.
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும்போதே நடந்த நேர்காணலில் தேர்வானாள். அவளை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றுதான் நான் கூறினேன். ஆனால் சுபாவோ, கண்டிப்பாக வேலைக்கு செல்வேன் என்று கூறிவிட்டாள்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் சுபா வேலையில் சேர்ந்தாள். அங்கு பணிபுரிந்து வரும் சில தோழிகளுடன் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கினாள். சுபாவுக்கு திருமணம் செய்து வைக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதன்படி மாப்பிள்ளை தேடி வந்தோம்.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் அவள் வீட்டிற்கு வந்து விடுவாள். இந்த வாரம் நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சுற்றுலாவாக குரங்கணி வனப்பகுதிக்கு அழைத்துச்செல்வதாகவும், அவர்களுடன் நானும் செல்வதாக என்னிடம் கூறினாள். நானும் அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தேன். ஆனால் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுபா எங்களை விட்டே சென்று விட்டாள். அவருக்கு திருமணம் செய்து வைத்து, மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அவளை பிணக்கோலத்தில் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே. நன்றாக சென்ற என் பெண் வீட்டுக்கு மூட்டையாக வந்து விட்டாளே.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
சுபாவின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வெற்றாங்கரை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பலியான சம்பவத்தால் திட்டக்குடியே சோகத்தில் மூழ்கி உள்ளது.#tamilnews