செய்திகள்

தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை ஆகஸ்ட் 28-ந்தேதிக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மாலை மலர்

சென்னை எழும்பூர் பொருளாதார நீதிமன்ற கோர்ட்டில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்வே வங்கிக்கு இந்தியாவில் இருந்து ரூ.80 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே அமலாக்க பிரிவு போலீசார் தினகரனிடம் கேள்வி கேட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டு பதிவை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். குற்றச்சாட்டு பதிவின் போது தன் கருத்துக்களை கேட்கவில்லை என்பதால் அந்த பதிவினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் குற்றச்சாட்டு பதிவின் போது அரசு தரப்பு காட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய என் வக்கீலுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அதனால் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீண்டும் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், கீழ் கோர்ட்டின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நாங்கள் கண்காணிக்க முடியாது என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் 16-ந்தேதி (இன்று) அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய தினகரன் வக்கீலுக்கு அனுமதி வழங்க வேண்டும். அன்று டி.டி.வி.தினகரன் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதி மலர்மதி முன்னிலையில் டி.டி.வி.தினகரன் இன்று காலையில் ஆஜரானார். அப்போது அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் வக்கீல் அனுமதி கேட்டார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.