மேட்ரிட்:
ஸ்பெயின் நாட்டில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடபகுதியில் கடந்த 13-ம் தேதி பலத்த புயற்காற்று வீசியது. இதனால், மேக கூட்டத்தில் உள்ள மழைதரும் சூல் மேகங்கள் வெகு விரைவாக குளிர்ச்சி அடைந்து ஆலங்கட்டி மழையாக பெய்ய தொடங்கியது.
குறிப்பாக, சொரியா என்ற பெருநகரின் அருகாமையில் உள்ள அல்மாஸன் நகரில் கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை அங்குள்ள அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கால்வாயில் படபடவென்று பந்து வடிவில் ஐஸ் கட்டிகள் விழுந்த காட்சிகளை சிலர் வீடியாவாக பதிவு செய்து, சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆலங்கட்டி மழையினால் அந்த நகரில் உள்ள கார்கள் சேதம் அடைந்த காட்சிகளையும், ஐஸ் கட்டிகள் விழுந்ததால் காயமடைந்த சில ஆடுகள் இறந்து கிடக்கும் காட்சிகளையும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.