செய்திகள்

மாட்டு தீவன ஊழல் வழக்கு: 3 நீதிபதிகள் முன்னர் லாலு பிரசாத் இன்று ஆஜரானார்

பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் இன்று தனித்தனியாக 3 நீதிபதிகள் முன்னர் விசாரணைக்கு ஆஜரானார்.

ராஞ்சி:

பீகார் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் மாட்டு தீவனம் வாங்கியதில் ரூ. 960 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் வழக்கில் அரசு கருவூலங்களில் இருந்து முறைகேடாக ரூ.33.7 கோடி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 43-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சிறையில் அடைக்கப்பட்ட அவர் இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்து பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசுகருவூலத்தில் இருந்து, ரூ3.31 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் லாலு பிரசாத் யாதவ் இன்று தனித்தனியாக 3 நீதிபதிகள் முன்னர் விசாரணைக்கு ஆஜரானார்.

வழக்கு எண் RC 64A/96 மற்றும் RC 38A/96 தொடர்பாக நீதிபதி ஷிவ்பால் சிங் முன்னரும், வழக்கு எண் RC68A/96  தொடர்பாக நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் முன்னரும், வழக்கு எண் RC47A/96.  தொடர்பாக நீதிபதி பிரதீப் குமார் முன்னரும் அவர் ஆஜரானார்.

SCROLL FOR NEXT