செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்: நிதி மந்திரி அருண் ஜெட்லி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார்.

மாலை மலர்

அகமதாபாத்:

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையாக, சங்கல்ப பத்ராவை நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று வெளியிட்டார்.

அப்போது அருண் ஜெட்லி பேசுகையில், குஜராத் மாநில அரசு சிறப்பாக செயலபட்டு வருகிறது. எனவே அதனை நாங்கள் மக்களுக்கு விளக்க வேண்டிய தேவை இல்லை. பொருளாதார வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் மாநிலம் 10 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. உலக வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.