உடுமலை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் வகையில் நிவாரணப்பணிகளுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி உடுமலை உள்ளிட்ட திருப்பூர் மண்டலத்தில் உள்ள நகராட்சிகளில் பணியாற்றி வரும் துப்புரவுப்பணியாளர்கள் சென்னைக்கு செல்கின்றனர்.
உடுமலை நகராட்சியில் இருந்து ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு மேற்பார்வையாளர் ஆகியோர் தலைமையில் ஒரு டிரைவர் மற்றும் 20 துப்புரவுப்பணியாளர்கள் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப்பொருட்களுடன் நிவாரணப்பணிக்காக புறப்பட்டு சென்றனர்.
உடுமலையில் இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர்(கூடுதல் பொறுப்பு) எஸ்.எஸ்.சுரேஷ்குமார், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.