செய்திகள்

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மாலை மலர்

தென்காசி:

ஒக்கி புயலால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 4 நாட்கள் பரவலாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் கடந்த வாரம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு வெள்ளப்பெருக்கு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய இந்த மழை நீடித்தது. தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதியிலும் மழை பெய்தது. மலைப்பகுதியில் பெய்த கனமழையால் இன்று காலை மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் குளித்தனர். தொடர்ந்து குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் மற்ற அருவிகளில் தண்ணீர் வரத்து அவ்வப்போது அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டும் என போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.