செய்திகள்

கொல்கத்தா: ரத்த வெள்ளத்தில் இளம்வயது விமானப் பணிப்பெண்ணின் மர்மப் பிணம்

தனியார் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக இருந்த 20 வயது இளம்பெண் கொல்கத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கொல்கத்தா:

மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங் நகரை சேர்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய். சுமார் 20 வயது மதிக்கத்தக்க கிளாரா, தனியார் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக (ஏர் ஹோஸ்ட்டஸ்) பணியாற்றியபடி கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

நேற்றிரவில் இருந்து அதிகாலைவரை இவரது வீட்டில் மது விருந்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்துவந்த போலீசார், பிரேதத்தை கைப்பறி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து, பின்னிரவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்ட இரு பெண்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக அவர் கீழே குதித்தோ, விழுந்தோ உயிரிழந்திருக்கலாம் என அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கருதுகின்றனர்.