செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் இறந்த விவகாரம் - அவசர வழக்காக விசாரிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையீடு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் இறந்த விவகாரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourtMaduraiBench

மதுரை:

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த குருசங்கர், இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு முன்பு ஆஜராகி முறையீடு செய்தார்.

மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது.

இதன் காரணமாக ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 பேர் இறந்தனர். உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்யப்படாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.

தென் தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை மிக முக்கியமான மருத்துவமனையாகும். இங்கு இதுபோன்ற கவனக்குறைவு ஏற்கத்தக்கதல்ல. இதற்கு யார் காரணம்? என்பதை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எனவே இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதிவாளரிடம் முறையாக அனுமதி பெற்று மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்றனர். #MaduraiGovernmenthospital #HighCourtMaduraiBench