ஈரானில் ரெயில் தடம் புரண்டு விபத்து 
செய்திகள்

ஈரானில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் பலி

ஈரான் நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 92 பேர் காயமடைந்தனர்.

தெஹ்ரான்:

ஈரான் நாட்டின் சிஸ்டன் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சகேதன் நகரில் இருந்து தலைநகர் தெஹ்ரானுக்கு பயணிகள் ரெயில் ஒன்று நேற்று புறப்பட்டது. சுமார் 250 பயணிகளுடன் சென்ற அந்த ரெயில் குரின் மாவட்டத்தின் ஷுரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 92 பயணிகள் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதிகளில் வீசும் அதிகப்படியான காற்றினால் தண்டவாளங்கள் மணலால் மூடப்படுகின்றன. இதனால் இம்மாதிரியான விபத்துக்கள் நிகழ்கின்றன, என அதிகாரிகள் தெரிவித்தனர்.