ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா-கட்வால் மாவட்டத்தில் உள்ள பருத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று இரவு வேலை முடிந்து பொலிரோ காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். பாரிசெர்லா பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை கட்வால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் சின்னப்பநாடு மற்றும் யமுனாம்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததே விபத்திற்கு காரணாம் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews