கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள சீரகோனார் பாளையத்தை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன் (வயது 52). பெயிண்டர். கடந்த 20-ந் தேதி உன்னி கிருஷ்ணன் மாயமானார். இது குறித்து அவரது உறவினர்கள் செட்டிப்பாளைம் போலீசில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் சூலூர் பட்டணம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கை, கால்களை கட்டிய நிலையில் ஆண் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது மாயமான உன்னி கிருஷணன் என்பது தெரியவந்தது. இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் செட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் முன்னிலையில் சரணடைந்தனர்.
அவர் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போத்தனூரை சேர்ந்த ஜான் பிரிட்டோ (26), என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஜோஸ்வா (18), தனியார் கல்லூரி மாணவர், ஜாக் வின்சென்ட் ஜான் (23), சேவியோ ராஜ்குமார் (23), யோகேஷ்வரன் (18) என்பது தெரியவந்தது.
மேலும் சம்பவத்தன்று உன்னிகிருஷ்ணன், ஜான் பிரிட்டோ உள்பட 6 பேரும் ஒன்றாக சேர்ந்து செட்டிப்பாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே மது அருந்தி உள்ளனர்.
அப்போது உன்னிகிருஷணன் , ஜான் பிரிட்டோவை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஜான் பிரிட்டோ உள்பட 5 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி உன்னி கிருஷ்ணனை கொலை செய்து பின்னர் அவரது உடலை பட்டணம் கிணற்றில் வீசிச் சென்றது தெரிய வந்தது.
கைதான போலீசார் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.