கைது 
செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

வெம்பக்கோட்டை பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

தாயில்பட்டி:

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து வெம்பக்கோட்டை அருகே உள்ள தெற்கு ஆனைக்குட்டம், வெற்றிலையூரணி, அண்ணா காலனி, கிழக்கு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வீடுகளில் சோதனை நடத்தினார்.

அப்போது தெற்கு ஆனைக்குட்டத்தில் சர்க்கரை ராஜ் (வயது48), அண்ணா காலனியில் ஆனந்தராஜ் (28), கிழக்குத்தெருவில் கருப்பசாமி (53), ஜெயராஜ் (58), சுரேஷ்குமார் (38) ஆகியோரின் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 75 கிலோ பட்டாசுகளையும், 200 குரோஸ் கருந்திரிகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல வேறு எந்த பகுதிகளிலும் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.